
வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல் நடத்தி வந்தார். காயமடைந்த தெரு நாய்களை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து உணவு கொடுத்து வந்தார்.
தற்போது சலபன்பேட்டையில் உள்ள வீட்டை விற்பனை செய்துவிட்டு காட்பாடி காந்தி நகர் வள்ளலார் தெருவில் தனது சகோதரர் பிரேம் ஆனந்துடன் வசித்து வருகிறார். திருவலம், எஸ்.எல்.புதூர் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்பவரின் கட்டடத்தை வாடகைக்கு எடுத்து நாய்கள் பராமரிப்பு மையம் நடத்தி வருகிறார்.
இங்கு காயமடைந்த மற்றும் வயது முதிர்ந்த, நோய்வாய் பட்ட தெரு நாய்களை மீட்டு உணவு மற்றும் சிகிச்சை அளித்து வருகிறார். நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வடிவேல் முறையான உரிமம் பெற்று உள்ளார்.
அவரது பராமரிப்பு மையத்தில் தற்போது 25 நாய்கள் உள்ளன. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை அடைத்து வைத்து அவற்றை வெட்டி விற்பனை செய்வதாக சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து இன்று காலை நாய்கள் பராமரிப்பு மையத்துக்குச் சென்ற அவர்கள், உடனடியாக அப்பகுதியில் இருந்து காலி செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் நாய்க்கறி வெட்டி விற்பனை செய்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. வதந்தி பரவியுள்ளது எனத் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது! 4 பேர் பலி!
இதுகுறித்து விசாரணை நடத்த காட்பாடி தாசில்தார், பிராணிகள் வதை தடுப்பு சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்கள் முறையாக விசாரணை நடத்திய பிறகு முழுமையான விவரங்கள் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.