
மும்பை: ஐடி பங்குகளின் தொடர் விற்பனையும் அதனை தொடர்ந்து அந்நிய நிதி வெளியேற்றம் காரணமாக இன்றைய பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 4வது அமர்வாக சரிந்து நிறைவடைந்தன.
30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 490.09 புள்ளிகள் சரிந்து 82,010.38 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 247.01 புள்ளிகள் சரிந்து 82,253.46 புள்ளிகளாகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 67.55 புள்ளிகள் சரிந்து 25,082.30 ஆக நிலைபெற்றது.
ஜூலை 9 முதல் இன்று வரையான 4 நாட்களுக்குள் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 1,460 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 440 புள்ளிகள் சரிந்தன.
சென்செக்ஸில் ஏசியன் பெயிண்ட்ஸ் 1.58 சதவிகிதம் சரிந்த நிலையில் டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகியவை சரிந்து முடிந்தன. இருப்பினும் எடர்னல், டைட்டன், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஐடிசி ஆகியவை உயர்ந்து முடிந்தன.
நிஃப்டி-யில் ஜியோ ஃபைனான்சியல், பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மஹிந்திரா, விப்ரோ, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை பங்குகள் சரிந்த நிலையில் எடர்னல், டைட்டன் கம்பெனி, இண்டஸ்இண்ட் வங்கி, ஓஎன்ஜிசி, எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகிய பங்குகள் உயர்ந்து முடிந்தன.
பங்கு சார்ந்த நடவடிக்கையில், மகாராஷ்டிரத்தில் வரி தகராறு வழக்கில் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்ததையடுத்து தொடர்ந்து காஸ்ட்ரோல் இந்தியா பங்குகள் உயர்ந்தன. முதலாம் காலாண்டு இழப்பு ரூ.428 கோடியாக குறைந்ததால் ஓலா எலக்ட்ரிக் பங்குகள் 19 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.
பங்குகளை பிரிக்க வாரியம் எடுத்த முடிவால் பி.இ.எம்.எல். பங்குகள் 4 சதவிகிதம் உயர்வுடனும், பிரமோட்டர்ஸ் தங்களிடம் உள்ள 32% பங்குகளை விற்க ஒப்புக்கொண்டதால் வி.ஐ.பி. இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 5 சதவிகிதம் உயர்வுடன் முடிந்தன.
ரூ.9.53 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம் டெஸ்கோ இன்ஃப்ராடெக் பங்குகள் 5 சதவிகிதமும், ரூ.21.60 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதன் மூலம் வின்சோல் இன்ஜினியர்ஸ் பங்குகள் 4 சதவிகிதம் அதிகரித்தது.
முதல் காலாண்டில் நிலையான லாபத்தை ஈட்டிய பிறகும் டிமார்ட் பங்குகள் சரிந்தன. இதற்கிடையில் முதல் காலாண்டு லாபம் 6% மற்றும் என்ஐஐ 10% சரிந்ததால் ஆதித்யா பிர்லா மணி பங்குகள் 5 சதவிகிதம் சரிவு. அதே வேளையில் ஏப்ரல் முதல் ஜூன் முடிய உள்ள முதல் காலாண்டில் விற்பனை மதிப்பு 65 சதவிகிதம் சரிந்து ரூ.108 கோடியாக இருந்ததையடுத்து அஜ்மீரா ரியாலிட்டி பங்குகள் 1 சதவிகிதம் சரிவுடன் முடிந்தன.
ஆனந்த் ரதி, பிரமல் எண்டர்பிரைசஸ், லாரஸ் லேப்ஸ், விஷால் மெகா மார்ட், குளோபல் ஹெல்த், இஐடி பாரி, ராம்கோ சிமென்ட்ஸ் உள்ளிட்ட 180 பங்குகள் இன்று பிஎஸ்இ-யில் கிட்டத்தட்ட 52 வார உச்சத்தை எட்டியது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் ஜூலை 18ஆம் தேதி ரூ.5,104.22 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ள நிலையில், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 0.71 சதவிகிதம் முதல் 1.04 சதவிகிதம் வரை அதிகரித்தது.
சுகாதாரம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் நிதியாண்டு 2026ல் வருவாய் குறைப்பு அபாயம் காரணமாக ஐடி துறை பங்குகள் பின்தங்கியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
இன்று தொடங்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த மற்றொரு சுற்று பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக அமைச்சர் குழு வாஷிங்டனை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆசிய சந்தைகளில், தென் கொரியா கோஸ்பி, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமான நிலையில், ஜப்பான் நிக்கி 225 குறியீடு சரிவுடன் முடிந்தன.
ஐரோப்பிய சந்தைகளும் இன்று சரிந்து முடிவடைந்த நிலையில் அமெரிக்க சந்தைகள் ஜூலை 18ஆம் தேதி சரிவுடன் முடிவடைந்தன.
இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 69,974 கோடி டாலராகக் குறைவு