jet

இந்திய விமானப்படையில் 60 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான “மிக்-21′ போர் விமானங்கள், செப்டம்பர் மாதத்தில் ஓய்வு பெற உள்ளன.

இந்திய விமானப்படையின் 93 ஆண்டுகால வரலாற்றில் எந்த ஒரு போர் விமானமும் மிக்-21 அளவுக்கு நீண்ட காலம் சேவையில் இருந்ததில்லை. கடந்த 1960-ஆம் ஆண்டுகளில் முதன்முறையாக மிக்-21 விமானங்கள் இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இந்தியாவின் போர் திறனை மேம்படுத்த 870-க்கும் மேற்பட்ட மிக்-21 ரக விமானங்கள் வாங்கப்பட்டன.

1965, 1971-ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போர்கள், 1999 கார்கில் மோதல், 2019 பாலாகோட் வான்வழித் தாக்குதல் ஆகியவற்றில் மிக்-21 விமானங்கள் முக்கியப் பங்காற்றின.

எனினும், மிக்-21 விமானங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் காரணத்தால், அவை “பறக்கும் சவப்பெட்டி’ என்ற அவப்பெயரையும் ஈட்டியது. இதுவரை 400-க்கும் மேற்பட்ட மிக்-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில் 200-க்கும் மேற்பட்ட விமானிகள் மற்றும் சில பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

“பாந்தர்ஸ்’ என்றழைக்கப்படும் விமானப் படையின் 23-ஆம் படைப்பிரிவின் வசமுள்ள இறுதி மிக்-21 விமானங்களுக்கு சண்டீகர் விமானப்படை தளத்தில் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி பிரியாவிடை அளிக்கப்படுகிறது. மிக்-21 விமானங்களுக்குப் பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட “தேஜஸ்’ இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி, 83 தேஜஸ் விமானங்களை வாங்குவதற்கு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ரூ.48,000 கோடிக்கு கடந்த 2019, பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்தது.

இந்த விமானங்களைத் தயாரித்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இச்சூழலில், மேலும் 97 தேஜஸ் விமானங்களை சுமார் ரூ.67,000 கோடி செலவில் வாங்குவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest