
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் படங்களுக்கு ஜப்பானில் தனி மவுசு. ரஜினியின் ‘முத்து’, ‘தர்பார்’ படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘வேட்டையன்’ படமும் வசூல் மழை பொழிந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 10 தேதி வெளியான ‘வேட்டையன்’ வெளியாகி ஓராண்டை நெருங்குகிறது.
இந்தப் படம் ஜப்பானிய மொழியில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் முதலிடத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் எஸ்.பியாக இருக்கும் அதியன் (ரஜினிகாந்த்) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கும் என்கவுன்ட்டர் ஸ்பஷலிஸ்ட் ஆக ரஜினி நடித்திருந்தார். என்கவுன்ட்டருக்கு எதிராக, மனித உரிமைகளுக்கு ஆதரவாக, தீர்க்கமாக உரையாடுகிற இடத்தில் நிதானமான நடிப்பை வழங்கி ஸ்கோர் செய்திருந்தார் அமிதாப் பச்சன். தவிர பகத் பாசில், மஞ்சுவாரியர் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றிருந்தது.
என்கவுன்ட்டர்தான் குற்றங்களுக்குத் தீர்வா போன்ற பல கேள்விகளுக்கு விடை காணும் கதையாக ‘வேட்டையன்’ இருந்தது. அதோடு, வியாபாரமாக மாறிப்போன கோச்சிங் கிளாஸ்களின் பின்னணியையும் இயக்குநர் த.செ.ஞானவேல் பேசியிருந்தார்.
‘வேட்டையன்’ படம் வெளியான சமயத்திலேயே ஜப்பானிலும் தமிழ் மொழியில் வெளியாகி இருந்தது. ஆனால் இப்போது ‘முத்து’, ‘தர்பார்’ போல ஜப்பானிய மொழியில் வெளியாகியிருக்கிறது. முதல் மூன்று நாட்களிலேயே படத்தை விநியோகித்த நிறுவனம், முதலீட்டை அள்ளிவிட்டது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. சினிமா பத்திரிகையாளரான சங்கர் இதுகுறித்து அவரது ‘என் வழி சினிமா’ சேனலில் பேசியிருக்கிறார். இது பற்றி சங்கரிடம் கேட்டோம்.

”ஜப்பான் மாதிரி ஒரு நாட்டில் தமிழ்ப் படங்களுக்கான மார்க்கெட்டை விரிவடைய செய்த பெருமை சூப்பர் ஸ்டாருக்கு உண்டு. இப்போது ‘வேட்டையன்’ உண்மையிலேயே ஜப்பானைக் கலக்கி வருகிறது. அந்தப் படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன், த்ரில்லர் என்று சொல்ல முடியாது.
கல்வியை மையப்படுத்திய படம். அந்தப் படம் குறிப்பிட்ட வசூலை ஈட்டியது. இன்னொரு காரணம், அந்தச் சமயம் பெருமழையும் இருந்தது. இதையும் தாண்டி மூன்றாவது வாரம் வரை தியேட்டர்கள்ல கூட்டம் இருந்தது. ‘வேட்டையன்’ கடந்த 5ம் தேதி ஜப்பான் மொழியில் அங்கே வெளியானது. இதனுடன் ஹாலிவுட் படங்களும் சில வெளியாகின.

ஜப்பானியப் பழைய படமும் வெளியானது. ஆனால் அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘வேட்டையன்’ கலெக்ஷனில் முதலிடத்தில் இருக்கிறது என்கிறார்கள் ஜப்பான் ரசிகர்கள். ஜப்பான் முழுவதும் 29 திரையரங்குகளில் வெளியானது.
பார்வையாளர்களின் பாராட்டு மிகச் சிறப்பாக உள்ளது. இரண்டாவது வாரமும் திரையிடப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் தலைவரின் சக்திவாய்ந்த நடிப்பும் ஸ்டைலும் மட்டுமின்றி, ஞானவேலின் திரைக்கதையையும் ரொம்ப விரும்புகிறோம்.
நாங்கள் வசூல் என்ற எண்களின் அடிப்படையில் மட்டும் தலைவரின் படங்களை மதிப்பிட விரும்பவில்லை. அமெரிக்கா அல்லது மலேசியாவை ஒப்பிடும்போது, ஜப்பானில் தமிழர்கள் மிகக் குறைவு. பார்வையாளர்களில் 90%க்கும் மேல் ஜப்பானியர்களே. அதனால், மற்ற நாடுகளைப் போலப் பெரிய அளவில் வெளியீடு இல்லை.
ஆனால், ஜப்பானியர்களின் ரஜினி சார் மீதான அன்பும் உற்சாகமும் எங்கும் காண முடியாத ஒன்று என்று நாங்கள் நம்புகிறோம். Collection is just a number. ‘ரஜினி சார் படங்களைப் பார்த்து, தமிழ் கலாசாரம், உணவு மற்றும் தமிழ் மக்களை விரும்பி வருகிற ஜப்பானியர்கள் பலர் இருக்கிறார்கள்’ என்று ஜப்பானிய ரசிகர் ஒருவர் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு முன் ‘முத்து’ படம் 15 கோடி வசூல் ஆகி, பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது. அந்தக் காலகட்டத்தில் அது மிகப்பெரிய வசூல். அதனைத் தொடர்ந்து ‘சிவாஜி’, ‘எந்திரன்’ வெளியானாலும் ‘தர்பார்’தான் 230 மில்லியன் யென் வசூலித்திருக்கிறது. நம்மூர் காசில் 14 கோடி அள்ளியது.
இப்போது வெளியாகியிருக்கும் ‘வேட்டையன்’ இன்னும் சில நாட்களில் 30 கோடியை நெருங்கினாலும் ஆச்சரியமில்லை. ஓராண்டுக் காலத்திற்குள் ‘வேட்டையன்’ மீண்டும் பேசு பொருள் ஆகியிருக்கிறது. ஜப்பானிய ரசிகர்கள் ‘இது ‘முத்து’வின் வசூலைத் தாண்டி முதலிடத்தைப் பிடிக்கும்’ என்கிறார்கள்” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…