
இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் அடுத்தடுத்த ஏற்படும் மக்கள் போராட்டம் இந்தியாவுக்கு புவி அரசியலில் ஒரு புதிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அது குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.
3 ஆண்டுகள்… 3 நாடுகள்… – கடந்த 2022-ம் ஆண்டு, இலங்கையில் மிகப் பெரிய மக்கள் புரட்சி வெடித்தது. 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்க மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது. அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகியதோடு, நாட்டை விட்டே தப்பியோட நேர்ந்தது. அதிபர் மாளிகையைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள் ‘பெட்ரோல், கேஸ் வாங்க முடியாமல் நாங்கள் இருக்க, அதிபர் மாளிகையின் செல்வச் செழிப்பைப் பாருங்கள்’ என்று வீடியோ எடுத்துப் பரப்பி விரக்தியை வெளிப்படுத்தினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சமடைந்தார்.