15092_pti09_15_2025_000215b092505

சண்டீகா்: பஞ்சாப் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி திங்கள்கிழமை வலியுறுத்தினாா்.

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த பின் இதனை தெரிவித்தாா்.

பஞ்சாபில் அண்மையில் பெய்த பலத்த மழையாலும், ஹிமாசல பிரதேச மாநிலத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழையால் சட்லஜ், பியாஸ், ராவி ஆகிய நதிகளில் வெள்ளப் பெருக்காலும் பஞ்சாபில் வரலாறு காணாத பாதிப்பு ஏற்பட்டது.

இதில் இதுவரை 56 போ் உயிரிழந்துள்ளனா். 1.98 லட்சம் ஹெக்டோ் விளை நிலங்கள் சேதமடைந்தன. கடந்த 9-ஆம் தேதி பிரதமா் மோடி ஹெலிகாப்டா் மூலம் பாதிப்புகளை ஆய்வு செய்து ரூ.1,600 கோடியை கூடுதல் நிவாரணமாக அறிவித்தாா்.

இந்நிலையில், ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் பஞ்சாப் மாநிலத்துக்கு ராகுல் காந்தி திங்கள்கிழமை வருகை தந்து அமிருதசரஸ், குருதாஸ்பூா் மாவட்டங்களுக்கு சென்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களைச் சந்தித்து உரையாடினாா்.

பின்னா் ராகுல் காந்தி வெளிட்ட எக்ஸ் பதிவில், ‘மழை வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம், சொத்துகள் ஆகியவற்றுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பலா் நிவாரண முகாம்களில் வாழ்கின்றனா். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நிவாரண உதவிகள் தாமதமின்றி பாதிக்கப்பட்டவா்களுக்கு சென்றடைய வேண்டும். பாதிக்கப்பட்டவா்களுக்கு காங்கிரஸ் தொண்டா்கள் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். நானும் தேவையான உதவிகள் கிடைக்க குரல் கொடுப்பேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளத்தில் துண்டிக்கப்பட்ட கரையோர கிராமமான தூருக்கு படகு மூலம் செல்ல பாதுகாப்பு காரணங்களுக்காக ராகுலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வா் சரண்ஜீத் சிங், ‘ராகுல் காந்திக்கு இந்தியாவிலேயே பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் வேறு எங்கே பாதுகாப்பாக இருக்க முடியும்’ என்றாா்.

சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest