
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள திரேஸ் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பு. இவர் கர்நாடகாவில் டவர் அமைக்கும் வேலையில் பணிபுரிந்து வருகிறார். ராமசுப்புவின் மனைவி சக்தி மகேஸ்வரி இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சக்தி மகேஸ்வரிக்கும் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர்.

காவலருக்கும் சக்தி மகேஸ்வரிக்கும் இருந்த திருமணம் மீறிய தொடர்பு காவலரின் வீட்டிற்கு தெரியவந்ததை தொடர்ந்து அவரின் மனைவி மற்றும் குடும்பத்தினர் சக்தி மகேஸ்வரி உடனான தொடர்பை கைவிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். சக்தி மகேஸ்வரியிடமும் இது குறித்து கூறியுள்ளனர். ஆனால், சக்தி மகேஸ்வரி தொடர்பை துண்டிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. காவலரின் மகனான இளஞ்சிறாரும் தனது தந்தையை பலமுறை கண்டித்து உள்ளார்.
அவர் கேட்காததால் சக்தி மகேஸ்வரி வீட்டுக்கு சென்று என்னுடைய தந்தையுடன் தொடர்பு வைத்து இருந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினாராம். ஆனாலும் சக்தி மகேஸ்வரி தொடர்ந்து காவலரும் தொடர்பில் இருந்தாராம். இதைத்தொடர்ந்து வீட்டில் சக்தி மகேஸ்வரி தனியாக இருக்கும்போது அங்கு வந்த காவலர் மகனான இளம் சிறார் மற்றும் அவரது நண்பரான மற்றொரு இளம் சிறார் ஆகியோர் சக்தி மகேஸ்வரியை கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இது தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாளமுத்து நகர் காவல் நிலைய போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் காவலரின் மகனான இளஞ்சிறார், தன் தந்தையுடனான தொடர்பை கைவிட மறுத்ததால் கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டுள்ளார்.