
இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷவுகத் அலி, நேற்று (செப். 19) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ரியாத் நகரில் கடந்த 17-ம் தேதி பாகிஸ்தானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதில், பாகிஸ்தான் சார்பில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் சவூதி அரேபியா சார்பில் அதன் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானும் கையெழுத்திட்டனர். எந்த ஒரு நாட்டுக்கு எதிரான எந்த ஒரு ஆக்கிரமிப்பும் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது. இது தற்காப்புக்கானது மட்டுமே. வேறு எந்த ஒரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. வேறு எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக இது தாக்கங்களை ஏற்படுத்தாது.