Untitled-design-2

ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டு மக்கள் அமெரிக்காவில் குடியேறுவதைக் கட்டுப்படுத்த மிகவும் முனைப்புடன் இருந்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அவரைப் பொறுத்தவரை, அமெரிக்க நிறுவனங்கள் பணிக்காக வெளிநாடுகளில் இருந்து மக்களை அழைத்து வரக் கூடாது. அமெரிக்க மக்களுக்கே அந்த வாய்ப்புகளைத் அமெரிக்க நிறுவனங்கள் தர வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கேற்ற மாதிரியான பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.

அப்படியான அதிரடி அறிவிப்பில் ஒன்று தான், நேற்று வெளியிடப்பட்டுள்ள H-1B விசா பற்றிய அறிவிப்பு.

டாலர்கள்
டாலர்கள்

என்ன அறிவிப்பு?

நாளை (செப்டம்பர் 21, 2025) முதல், வெளிநாடுகளில் இருந்து H-1B விசாவின் கீழ், பணியாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு 1 லட்சம் டாலர்களை செலுத்த வேண்டும். இது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 88 லட்சம் ஆகும்.

இந்தத் தொகையை செலுத்தாமல், H-1B விசா அந்தஸ்தின் கீழ், நிறுவனங்கள் பணியாளர்களை அழைத்து வர முடியாது. அதாவது, அந்தப் பணியாளர்களை அமெரிக்க அரசாங்கம் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்காது.

மேலும், இந்தத் தொகையை செலுத்தி அமெரிக்காவிற்குள் வரும் வெளிநாட்டு பணியாளர்கள் வெறும் 12 மாதங்களே அமெரிக்காவில் தங்கியிருக்க முடியும். அதன் பின், இந்த விசா நீட்டிக்கப்பட்டால் மட்டுமே, அந்தப் பணியாளர் அமெரிக்காவில் வேலையை தொடர முடியும்.

H-1B விசா என்றால் என்ன?

இது வேலைக்கான தற்காலிக விசா ஆகும். இந்த விசாவின் கீழ், மிகவும் முக்கிய மற்றும் ஸ்பெஷலான திறன்களைக் கொண்ட பணியாளர்களை நிறுவனங்கள் அழைத்து வரும்.

இவர்கள் பெரும்பாலும் ஐ.டி, இன்ஜினீயரிங், மருத்துவம், அறிவியல், கணிதம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

தற்போது H-1B விசாவிற்கான கட்டணமாக 1,700 – 4,500 டாலர்கள் வரை வசூலிக்கப்படுகிறது. இதுவே அதிகமாக கருதப்படும் வேளையில், 1 லட்சம் டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது.

அறிவியல்
அறிவியல்

இவர்கள் விதிவிலக்கு!

சிலருக்கு இந்த 1 லட்சம் டாலர்கள் விதிவிலக்கு உண்டு.

உலக தரம் வாய்ந்த ஆய்வாளர்கள், அமெரிக்க பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்கள், அவசரக்கால மருத்துவத்துறை தொழிற்சாலை போன்ற சில துறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு.

அதுவும் இந்தப் பணியாளர்களை வேலைக்கு எடுப்பது தேச நலன் சார்ந்ததாகவும், அமெரிக்கர்களின் வேலை மற்றும் அமெரிக்கர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாமல் இருந்தால் மட்டுமே இந்த விதிவிலக்கு கிடைக்கும்.

அமெரிக்க அரசாங்கத்தின் குற்றச்சாட்டு என்ன?

பல நிறுவனங்கள், குறிப்பாக ஐ.டி நிறுவனங்கள், H-1B விசாக்களைத் திறன் வாய்ந்த பணியாளர்களை அழைத்து வர பயன்படுத்தாமல், அமெரிக்கர்களுக்குப் பதிலாக இவர்களை அழைத்து வருவதாக அமெரிக்க அரசாங்கம் கருதுகிறது.

இதன் மூலம், ‘பெஸ்ட்’ பணியாளர்களை அழைத்து வராமல், குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை அழைத்துவருவதாகவும் குற்றம் சாட்டுகிறது.

இதனால், அமெரிக்கர்களின் சம்பளம் குறைவதோடு, அமெரிக்க பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பும் குறைகிறது என்று கூறுகிறார்கள்.

தகவல்கள்…

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள்…

2000-ம் ஆண்டு அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாக இருந்திருக்கிறது.

ஆனால், அது 2019-ம் ஆண்டு 2.5 மில்லியனாக உயர்ந்துள்ளது.

ஐ.டி
ஐ.டி

கணினி மற்றும் கணிதத் துறையில் 2000-ம் ஆண்டு 17.7 சதவிகித வெளிநாட்டு பணியாளர்கள் இருந்திருக்கின்றனர். 2019-ம் ஆண்டு 26.1 சதவிகிதம் உயர்ந்திருக்கின்றனர்.

ஐ.டி துறையில், H-1B விசாவினரின் எண்ணிக்கை 32% (2003-ம் ஆண்டு)-ல் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் 65 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு, H-1B விசா பணியாளர்களைப் பணியமர்த்துவதன் மூலம் நிறுவனங்கள் 35 சதவிகித சம்பளத்தை சேமிக்கின்றன என்றும் அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

சில நேரங்களில், இந்த விசாக்கள் மூலம் அமெரிக்காவிற்குள் வரும் பணியாளர்கள் குற்ற சம்பவத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

யாருக்கு இந்த 1 லட்சம் டாலர்?

நாளை முதல் H-1B விசா மூலம் வரும் பணியாளர்களுக்கே இந்தச் சட்டம் பொருந்தும்.

இந்தச் சட்டம் அடுத்த ஆண்டும் தொடரப்படுமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தியர்களுக்கு என்ன பாதிப்பு?

ஐ.டி துறைகளில் பெரும்பாலும் இந்தியர்கள் மற்றும் சீனர்களைத் தான் அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு அழைத்து செல்கின்றன. அதனால், H-1B விசாவிற்கு கூடுதல் கட்டணம் விதிப்பதன் மூலம், இந்தியர், சீனர்களை அமெரிக்க நிறுவனங்கள் வேலைக்கு எடுப்பது குறையும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest