
ஏசி பெட்டியில் பயணிகளின் வசதிக்காகக் கொடுக்கப்படும் போர்வை மற்றும் படுக்கை விரிப்புகளை, சில பயணிகள் தங்களது உடைமைகளுடன் எடுத்துச் செல்லும் விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுவரை, ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகள் சரியாக சுத்தம் செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு மட்டுமே அவ்வப்போது எழுவது வழக்கம். இதற்கு ரயில்வே விளக்கம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடும். ஆனால், இந்த முறை புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது.
புரி – தில்லி இடையே இயக்கப்பட்டு வரும் புருஷோத்தம் விரைவு ரயிலில் பயணித்த சில பயணிகளின் உடைமைகளை, டிக்கெட் பரிசோதகரும், ரயில்வே ஊழியரும் சோதனை செய்தபோது, அவர்களது பைகளில் ஏசி பெட்டியில் வழங்கப்படும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது அனைத்தையும் ரயில்வே ஊழியர் விடியோவாகப் பதிவு செய்து சமுக வலைத்தளத்தில் வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு குடும்பத்தினர் வைத்திருக்கும் அனைத்துப் பைகளிலும் இதுபோன்று போர்வைகள் இருந்ததும், ஊழியர்கள் அவற்றைத் திருப்பிக் கொடுங்கள், இல்லாவிட்டால் ரூ.780 அபராதம் செலுத்துங்கள் என்று கூறுகிறார்கள். செய்வதறியாக திகைத்த குடும்பத்தினர், அவற்றைத் திரும்பக் கொடுத்து விடுகிறார்கள்.
முதல் வகுப்பில் பயணித்த அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, தெரியாமல் இவற்றை எடுத்து வைத்திருக்கலாம் என்றும், வேண்டுமென்றே வைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். அதற்கு ஊழியர்கள், இது பயன்படுத்த மட்டுமே என்று எச்சரிப்பதும் விடியோவில் பதிவாகியிருக்கிறது.
ரயில்வேயின் கடமை
இந்திய ரயிலில், குளிர் சாதன வகுப்பில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக போர்வை, டவல் போன்றவற்றை வழங்க வேண்டியது கடமை. இதனை சுத்தமாக பராமரிக்க வேண்டியதும் அவசியம். பயணம் முடிந்ததும் பயணிகள் அதனை திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இது முழுக்க முழுக்க ரயில்வேயின் சொத்து. அவற்றை தனிநபர்கள் எடுத்துச் செல்வது தவறு. அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.