
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தின் மீது அந்நாட்டு விமானப் படை நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் பெயரில் அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில் உள்ள மாட்ரே தாரா கிராமத்தில் நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் போர் விமானங்கள் 8 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். அங்கு கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி தொடர்கிறது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.