
கரூரில் நடந்த த.வெ.க பரப்பரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டையே கலங்க வைத்தது.
இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை கோரியும், த.வெ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 7 பொது நல வழக்குகளும், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன் மனுக்களும் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு விசாரணையின்போது நடந்தவற்றை பார்க்கலாம்.

“ஏழு வழக்குகளும் ஒவ்வொரு வழக்காக தனியாக விசாரணை நடத்தப்படும்” என்று நீதிபதிகள் தெரிவிக்க, “சில வழக்குகள் சிபிஐ விசாரணை கோரி தாக்கலாகியுள்ளன, பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக் கோரி சில வழக்குகள் தாக்கலாகியுள்ளன.
இழப்பீடு கோரி சில வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆகவே அதற்கேற்ப விசாரிக்கலாம்” என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொதுக்கூட்டங்களின் போது உரிய வழிகாட்டல்களை டிஜிபி பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “விஜய் பிரசாரம் செய்த நாமக்கல், கரூரில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பிடப்பட்ட நேரம் 12 மணி ,ஆனால் விஜய் வந்தது இரவு 7 மணி, குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராததால் கூடியிருந்தவர் நீரிழப்பிற்கு ஆளாகி, சோர்வடைந்தனர், அந்த நேரத்தில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டது” என்று தெரிவிக்கபட்டது.
“எப்படி அந்த இடத்தில் அனுமதி கொடுத்தீர்கள், அது மாநில சாலையா? மத்திய அரசின் சாலையா?” என்று அனுமதி நகலை நீதிபதிகள் கேட்டனர்.
“வேலுச்சாமிபுரம் அருகேயுள்ள பேருந்து நிலையம் அருகே அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல” என்று அரசுத்தரப்பில் தெரிவித்தனர்.
“கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு குடீநீர், கழிப்பறை போன்ற வசதிகள் வழங்கப்பட்டதா? எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியேறிச் செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும்” என்றனர் நீதிபதிகள்.
“கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணை கோரிய வழக்கு விசாரணையின்போது, “சம்பவம் நடைபெற்று மாநில அரசின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் வேறு விசாரணை கோருவது ஏன்? கரூர் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது, சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என உத்தரவிட்டனர்.

“உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை எண்ணிப்பாருங்கள். யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?” என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், சிபிஐ விசாரணை, இழப்பீட்டு் தொகை அதிகரிப்பு, உடற்கூராய்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 4 வழக்குகளைத் தள்ளுபடி செய்தனர்.
பொதுக்கூட்ட நடைமுறைகள் தொடர்பான 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.