பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த உயிரியல் ஆராய்ச்சியாளரான பியர் சோனெராட் என்பவர் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய துணைக்கண்டத்தில் தென்பட்ட பல அரிய உயிரினங்களை தனது டைரி குறிப்புகள் மூலம் பதிவு செய்தவர். புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான இவர் தன் கண்களால் பார்த்த உயிரினங்களை தத்ரூபமாக வரையும் அசாத்திய திறனையும் கொண்டிருந்தார்.

1813 – ம் ஆண்டு புதுச்சேரி பகுதியில் வித்தியாசமான மூஞ்சுறு ( Shrew) ஒன்றைப் பார்த்திருக்கிறார். சின்னஞ்சிறிய பாலூட்டி இனமான அதன் உடலின் நடுப்பகுதியில் வெள்ளை நிற பட்டையுடன் காணப்பட்ட அந்த மூஞ்சுறு குறித்து தன்னுடைய டைரி குறிப்புகளில் விரிவாக எழுதியதுடன் அதன் உருவத்தையும் தெள்ளத்தெளிவாக வரைந்திருக்கிறார். அவரின் மறைவுக்குப் பிறகு டைரிக்குறிப்புகளில் சில புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.
பியர் சோனெராட் கண்டறியப்பட்டு பெயர் குறிப்பிடப்படாத இந்த மூஞ்சுறு குறித்து 2011 ம் ஆண்டுகளில் ஆய்வில் இறங்கிய ஆன்டனி செக்கே என்கிற உயிரின ஆராய்ச்சியாளர், அதன் கண்டுபிடிப்பாளரின் பெயரையே ‘சோனெராட் ஷ்ரூ’ ( டிப்ளோமசோடன் சோனெராட்) என 2018 – ம் ஆண்டு பெயர் சூட்டியிருக்கிறார்.

பியர் சோனெராட்டிற்கு பிறகு வேறு யாரும் இந்த மூஞ்சுறுவை பார்த்தாகவோ பதிவு செய்ததாகவோ ஆராய்ச்சி உலகில் தரவுகள் இல்லை. டைரி குறிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உயிரினம் பூமியில் வாழ்ந்திருக்கலாம் என்ற தீர்க்கமான முடிவுக்கு வர ஆராய்ச்சியாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். அதேவேளையில் இந்த உயிரினம் பூமியிலிருந்தே முற்றாக அழிந்த உயிரினமாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏரிக்கு அருகில் வித்தியாசமான மூஞ்சுறு ஒன்று இறந்துக் கிடப்பதை மொய்னுதின், சாம்சன், முகது சாஹிர், அபினேஷ், பிரவீன் அடங்கிய வன உயிரின ஆராய்ச்சி குழுவினர் 2022- ம் ஆண்டு கண்டறிந்துள்ளனர். பின்னர் பியர் சோனெராட்டால் குறிப்பிட்ட பட்ட மூஞ்சுறு குறித்து தெரிய வந்ததும், அது குறுத்த தகவல்களை தேடி இருக்கிறார்கள். இது அதே மூஞ்சுறு வகையை சேர்ந்ததாக இருக்கலாம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இந்த உயிரினம் வாழ்ந்து வருவதாகவும் ஆராய்ச்சி குழுவினர் நம்புகின்றனர். அரசு தரப்பில் அனுமதி, நிதியுதவி போன்றவை கிடைத்தால் அதன் தற்போதைய வாழ்நிலை, சூழலியல் முக்கியத்துவம் போன்றவற்றை கண்டறிய ஏதுவாக இருக்கும் என்கிறார்கள் நீலகிரியைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சி குழுவினர்.