‘மான் கராத்தே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம், ‘ரெட்ட தல’. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக திரைக்கு வருகிறது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினர் உட்பட சிறப்பு விருந்தினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்வில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் திருக்குமரன் என்கிட்ட உதவி இயக்குநராக இருந்தவர்.
கஜினி, ஏழாம் அறிவு படங்கள்ல என்கூட வேலை பார்த்தவர் துப்பாக்கி படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளிலும் அவர் இருந்திருக்காரு.
எனக்கு பிடிச்ச நபர் அவர். இந்தப் படத்தோட ‘ரெட்ட தல’ என்கிற டைட்டில் நான் ரொம்ப நாட்களாக யூஸ் பண்ணனும்னு கனவாக வச்சிருந்த டைட்டில். திடீர்னு என்கிட்ட வந்து இந்த டைட்டில் எனக்கு வேணும்னு அவர் கேட்டாரு.

நானும் கொடுத்திட்டேன். கொடுக்கலைனா கண்டிப்பாக பிடுங்கி இருப்பாரு (சிரித்துக்கொண்டே…). மிகச் சரியான இடத்துக்கு அந்த தலைப்பு வந்திருக்கு.
‘மான் கராத்தே’ படத்தின் மூலம் திருக்குமரனை நான்தான் இயக்குநராக அறிமுகப்படுத்தினேன்.
‘என்னை அறிந்தால்’ படத்துக்குப் பிறகு அருண் விஜய் சாருடைய வளர்ச்சி வேற மாதிரி இருக்கு. அவர் கதையை தேர்வு செய்யும் விதமும் ரொம்ப நல்லா இருக்கு. சினிமாவுல அவருக்கு இன்னும் நிறைய இடங்கள் காத்திருக்கு.” எனப் பேசினார்.