
பவுத்த மதத் தலைவர் என்றவுடன் சாமானிய இந்தியர்களின் மனங்களில் சட்டென நினைவுக்கு வருபவராக திபெத்திய பவுத்த மதத் தலைவரான தலாய் லாமா இருக்கிறார். தீவிர சீன எதிர்ப்பாளரான அவர், இந்தியாவின் தர்மாசாலாவில் தஞ்சமடைந்திலிருந்தே எழுப்பும் திபெத் விடுதலைக்கான குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆன்மிகம், அரசியல் என்று சமமாகப் பேசும் அவரது வீச்சு, அவர் மீதான ஊடக வெளிச்சம் எப்போதும் குறைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளும்.
அவரது ஆன்மிக சொற்பொழிவுகளைக் கேட்பதற்காக மட்டுமே பல்துறை பிரபலங்களும் தர்மசாலாவுக்கு விசிட் அடிப்பதும், அது ஊடக கவனத்துக்கு வருவதும் வழக்கம். சில நேரங்களில் சினிமா பிரபலங்கள் கூட தலாய் லாமாவை சந்திப்பது உண்டு. இப்படியான பிரபல முகமான தலாய் லாமா சுற்றிய பேச்சு இன்னும் அதிகமான வீச்சைக் கண்டுள்ளது. திபெத்திய புத்த மதத்தின் 14-வது தலாய் லாமாவாக இருக்கும் தற்போதைய தலைமையின் காலத்துக்குப் பின்னர் யார் அந்தப் பதவிக்கு வருவார்கள் என்பதே திடீர் வீச்சின் காரணமாக உள்ளது.