
இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கியது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்தில் இருந்து சத்தீஸ்கரின் ராய்ப்பூருக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 6.35 மணிக்கு 51 பயணிகளுடன் இண்டிகோ விமானம்(6E-7295) புறப்பட்டது.
அப்போது புறப்பட்ட சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக அலாரம் அடித்துள்ளதையடுத்து விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்து விமானத்தை மீண்டும் இந்தூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் விமானிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். மேலும் பயணிகளுக்கு விமானக் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று இண்டிகோ நிர்வாகம் கூறியுள்ளது.
“விமானத்தில் கோளாறு இருப்பது பற்றி விமானி தெளிவாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அலாரம் அடித்ததையடுத்து பாதுகாப்பு கருதி விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கியுள்ளார். இதுகுறித்து விசாரிக்கப்படும். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்” என்று விமான நிலைய இயக்குநர் தெரிவித்தார்.
எனினும் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.