
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவருமான ஆசிப் அலி சர்தாரி, அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இதனை பாகிஸ்தான் மக்கள் கட்சியும், ஆளும் பிஎம்எல்(என்) தலைவர்களும் மறுத்துள்ளனர். அதேவேளையில், ராணுவத் தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானில் ராணுவ ஆட்சியை கொண்டுவர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பாகிஸ்தானில் கடந்த 2024-ல் நடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி. போதிய பெரும்பான்மை இல்லாததால், பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது. இதையடுத்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஆசிப் அலி சர்தாரி நாட்டின் அதிபரானார்.