12072_pti07_12_2025_000150a094812

‘இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது’ என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசம் மாநிலம் சௌக் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட காளி கோயிலின் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்துக்கு காளி தெய்வத்தின் சிறப்பு ஆசி எப்போதும் உள்ளது. இதனால் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா வெற்றிகரமாக அழித்தது. பெண் ராணுவ வீராங்கனைகள் மற்றும் விமானிகள் அதிக அளவில் பங்கேற்ற இந்த நடவடிக்கையில் நம் எதிரிகள் வீழ்த்தப்பட்டனா்.

நமது கலாசாரத்துக்கு உரிய மதிப்பளித்திருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் சுயமரியாதை வலுப்பட்டிருக்கும். ஆனால் அது நிகழவில்லை. சுதந்திரத்துக்குப் பிறகு சோம்நாத் கோயிலை மறுகட்டமைப்பு செய்ய எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சிந்தனைகள் பல ஆண்டுகளாக இந்தியாவில் நிலவி வந்தன. இதன் காரணமாக பாரம்பரியத்தின் பெருமைகளைக் கொண்டாட இந்தியா தவறியது.

பொருளாதார வளா்ச்சிக்காக புவியியல் பரப்பை விரிவாக்கவோ அல்லது சுரண்டலில் ஈடுபடும் நடவடிக்கைகளையோ இந்தியா ஒருபோதும் அனுமதித்ததில்லை.

இந்த தருணத்தில் தாய்நாட்டுக்காக வீரமரணமடைந்த மனோஜ் பாண்டே உள்ளிட்ட வீரா்களை நினைவுகூர வேண்டும். மனோஜ் பாண்டே கூா்கா ரைஃபிள்ஸ் படையில் சேவையாற்றினாா். அந்தப் படையின் முழக்கம் ‘ஜெய் மகாகாளி ஆயோ கூா்காளி’ என்பதாகும். துணிச்சலின் அடையாளமாக தெய்வம் மகாகாளி திகழ்கிறாா் என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest