
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இயற்கை எய்தினார். இவருக்கு வயது 87.
இவர் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவிலுள்ள தனது இல்லத்தில் காலமானார் சரோஜா தேவி.
இவர் 1955-ம் ஆண்டு ‘மகாகவி காளிதாசா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பெருங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட சரோஜா தேவியின் தந்தை ஒரு காவல் அதிகாரி.

அவரின் தந்தைதான் சரோஜா தேவியின் நடிப்பின் பக்கம் வருவதற்கு மிக முக்கியமான காரணம்.
சரோஜோ தேவியின் சினிமா கனவிற்கு பக்கபலமாகவும் இருந்திருக்கிறார் அவரின் தந்தை. கன்னடத்தில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே பலரின் பாராட்டுகளைப் பெற்றார்.
அத்திரைப்படத்தைத் தொடர்ந்து சிவாஜி கணேசனின் ‘தங்கமலை ரகசியம்’ படத்தில் நடித்தார் தமிழ் சினிமாவுக்கு பரிச்சயமானார்.
இதை தொடர்ந்து எம்.ஜி.ஆருடன் இவர் நடித்திருந்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின் வெற்றி தமிழ் மக்களுக்கு இன்னும் இவரை நெருக்கமாக்கியது.
எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற தமிழ் சினிமாவின் ஆளுமைகள் பலருடனும் சரோஜா தேவி இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என கிட்டதட்ட 30 வருடங்களில், 160-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த ஒரே நடிகை இவர்தான் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

இவர் தமிழில் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ‘ஆதவன்’ படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு கடந்த 1969-ம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 1992-ம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. அத்தோடு தமிழக அரசின் கலைமாமணி விருதும் இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சரோஜா தேவியின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.