
மேற்கு வங்கத்தில் உள்ள ஐஐடி-கரக்பூர் விடுதியில் இருந்து மாணவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த மாணவரின் பெயர் ரிதம் மொண்டல் (21). அவர் நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர். அவர் ஐஐடி-கரக்பூர் வளாகத்தில் உள்ள ராஜேந்திர பிரசாத் மண்டபத்தின் அறை எண் 203 இல் வசித்து வந்தார். அங்கிருந்து அவரது சடலம் மீட்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அறிந்ததும் ஐஐடி-கரக்பூரின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஹிஜ்லி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர்.
அதன் பிறகு, காவல் துறையினரும் ஐஐடி – கரக்பூர் பாதுகாப்புக் காவலர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று மாணவரை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டனர். அவர் பி.சி. ராய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். இறந்த மாணவரின் குடும்பத்தினருக்கு ஐஐடி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தில்லியில் ஒரே நாளில் 45 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பரபரப்பில் தலைநகரம்!
குடும்பம் கொல்கத்தாவில் உள்ள ரீஜண்ட் பார்க் பகுதியில் வசிக்கிறது. ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உடற்கூராய்வு அறிக்கை கிடைத்த பிறகுதான் இதுகுறித்து தெளிவாகத் தெரியும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர் ஒருவரின் தூக்கில் தொங்கிய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இது தற்கொலையாகத் தெரிகிறது. இருப்பினும், உடற்கூராய்வுக்குப் பிறகுதான் இறப்பிற்கான காரணம் தெரியவரும். குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].