
கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டியில் களமிறங்காத ரஹானே (37) தனக்கு தொடர்ந்து டெஸ்டில் விளையாட விருப்பம் உள்ளதாகவும், இது தொடர்பாக தேர்வர்களை தொடர்புகொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளார்.
லண்டனில் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரஹானே, “நான் இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். அதில் எனக்கு அதிக உத்வேகம் உள்ளது, டெஸ்ட் விளையாடும் தருணங்களை நான் அதிகம் என்ஜாய் செய்வேன்” எனக் கூறியுள்ளார்.

தான் தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகப் பேசிய ரஹானே, “நான் சில நாட்கள்தான் இங்கே இருக்கிறேன். ஆனாலும் என் பயிற்சி உபகரணங்களையும், ஆடையையும் எடுத்து வந்திருக்கிறேன். எங்களது உள்ளூர் சீசன் தொடங்குவதனால் அதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன” என்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகும் கே.எல்.ராகுல் மட்டுமே பழைய வீரர்களில் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டுள்ளார்.
கடுமையான போட்டி நிலவினாலும் ரஹானே தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகப் பேசியுள்ளார். உள்நாட்டுப் போட்டிகளில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு கம்பேக் கொடுக்க முயற்சிக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
செலக்டர்களை தொடர்புகொண்ட Ajinkya Rahane!

“வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் தேர்வர்களைத் தொடர்புகொள்ள முயற்சித்தேன். சில விஷயங்கள் வீரர்கள் கையில் இருப்பதில்லை. எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
ஒரு வீரராக நான் செய்ய முடிவதெல்லாம் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவது், விளையாட்டை ரசிப்பது, ஒவ்வொரு முறையும் எனது சிறந்த ஆட்டத்தை வழங்குவது மட்டுமே.” எனக் கூறியுள்ளார் ரஹானே.
இந்திய அணியில் இடம் பெறாவிட்டாலும் ரஹானே, தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மும்பை அணியை ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு எடுத்துச் சென்றுள்ளார்.
2023-24 சீசனில் மும்பை அணி கோப்பையை வென்றது, 2024-25 சீசனில் இரண்டாம் இடம் பிடித்தனர். கடைசி ரஞ்சி டிராபியில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதத்துடன் 14 இன்னிங்ஸ்களில் 467 ரன்கள் குவித்தார்.
ஐபிஎல் 2025 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக அதிகபட்ச ரன் குவித்த வீரராக 14 இன்னிங்ஸில் 390 ரன்கள் அடித்தார்.