
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஆசிய கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியுள்ளது.
குரூப் A-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியாவும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த பாகிஸ்தானும், குரூப் B-ல் 3 வெற்றிகளுடன் முதலிடம் பிடித்த இலங்கையும், 2 வெற்றிகளுடன் இரண்டாமிடம் பிடித்த வங்காளதேசமும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

இந்தச் சுற்றில் தலா 3 போட்டிகளில் ஆடும் அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 28-ம் தேதி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த சுற்றின் முதல் போட்டியில் இலங்கையும், வங்காளதேசமும் இன்று மோதுகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்டம்பர் 18) ஆப்கானிஸ்தானுடனான போட்டியின்போது தனது தந்தையை இழந்த இலங்கை இளம் ஆல்ரவுண்டர் வீரர் துனித் வெல்லாலகே, நேற்று தன் தந்தைக்கு இறுதியஞ்சலி செலுத்திய இரவே துபாய்க்கு கிளம்பிய நிகழ்வு பலரை நெகிழ வைத்திருக்கிறது.
இது குறித்து இலங்கை கிரிக்கெட் அணி நிர்வாகம் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “மறைந்த தன் தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு திரும்பிய துனித் வெல்லாலகே, நாளை காலை மீண்டும் அணியுடன் இணைவார்.
அணி மேலாளர் மஹிந்தா ஹலங்கோடுடன் இன்றிரவு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் மேற்கொள்வார்.
Dunith Wellalage, who returned home to pay his last respects to his late father, will rejoin the team tomorrow morning.
He will travel to the UAE tonight accompanied by Team Manager Mahinda Halangode.
Sri Lanka will begin its Super Four stage campaign of the ongoing tournament… pic.twitter.com/ST16buupH3
— Sri Lanka Cricket (@OfficialSLC) September 19, 2025
இலங்கை அணி நாளை (செப்டம்பர் 20) வங்காளதேசத்துக்குடனான போட்டியுடன் சூப்பர் 4 சுற்றைத் தொடங்கும்.
இப்போட்டிக்கு வெல்லாலகே தயார் நிலையில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று முன்தினம் இலங்கையுடனான போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெல்லாலகே வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, இரண்டாவது இன்னிங்ஸின்போது வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.