
எல்லோருமே தலைமுடியை அலங்கரிக்கவும், அதற்காக ஷாம்பு (shampoo), சீரம் (serum) போன்றவற்றைப் பயன்படுத்தவும் செய்கிறோம். இவற்றில் சிலருக்கு நல்ல பலன் கிடைக்கிறது. சிலருக்கோ இருக்கும் முடியும் உதிர்ந்துவிடுகிறது. இதனால், குறிப்பாக இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தலைமுடியை வாரும்போது கொத்து கொத்தாக முடி கையில் வருவதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர். சரி முடி கொட்டிவிட்டது; வழுக்கை வந்துவிட்டது; அதற்கு PRP, PRF மற்றும் GFC சிகிச்சைகள் செய்யலாமா என சென்னையைச் சேர்ந்த டெர்மட்டாலஜிஸ்ட் டாக்டர் மாயா வேதமூர்த்தி அவர்களிடம் கேட்டோம்.

”ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, பதற்றம், மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, மரபியல், சீரற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு, தூக்கமின்மை, அதிக வெப்பம் அல்லது ரசாயனங்கள் பயன்படுத்துதல் (ஹேர் டை, ஸ்டைலிங் கருவிகள்), சுற்றுச்சூழல் மாசு, தலைக்குக் குளிக்கும் தண்ணீரின் தரம் மற்றும் கடுமையான காலநிலை என்று மனிதர்களின் முடிஉதிர்வுக்கு எக்கச்சக்க காரணங்கள் இருக்கின்றன.
முதலில் நீங்கள் ஒரு டெர்மட்டாலஜிஸ்ட்டை சந்தித்து உங்கள் முடியுதிர்வு எந்த நிலையில் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். முடி உதிர்வில் ஸ்டேஜ் 1,2,3 என்று உள்ளது. இதில் மூன்றாவது ஸ்டேஜ் வந்துவிட்டால், PRP (Platelet-Rich Plasma), PRF (Platelet-Rich Fibrin), மற்றும் GFC (Growth Factor Concentrate) ஆகிய சிகிச்சைகளை செய்வார்கள்.
தற்போது, ரீஜெனரேட்டிவ் மெடிசின் (Regenerative Medicine) முறையில், சிகிச்சை செய்யப்படுபவரின் ரத்தத்தை எடுத்து, அதிலிருந்து பிளேட்லெட்டுகளைப் பிரித்து, முடி இல்லாத பகுதியில் உரம் போடுவதைப் போல மருந்தைச் செலுத்தினால், அந்த இடத்தில் முடி விரைவாக வளரும். இந்த முறையில், நம் உடலின் சுத்தமான ரத்தத்திலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட அணுக்கள் பயன்படுத்தப்படுவதால், இது இயற்கையான முறையாகும் (hair care).
PRP, PRF, மற்றும் GFC சிகிச்சைகள் முடி உதிர்வு, முகத்தில் சுருக்கங்கள், தோல் புண்கள், முகப்பரு, தழும்புகள், மற்றும் பிக்மென்டேஷன் (Pigmentation) போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. விரைவான முடி வளர்ச்சிக்கு PRF சிகிச்சை மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. PRP மற்றும் PRF-ஐ ஒருங்கிணைத்தவைதான் GFC சிகிச்சை.

இந்த சிகிச்சைகளில் எந்தவொரு தொற்று (Infection) ஏற்படுவதற்கான வாய்ப்பும் இல்லை, ஏனெனில் இது சம்பந்தப்பட்டவர்களுடைய ரத்தத்தைப் பயன்படுத்தி இயற்கையாகச் செய்யப்படுகிறது. ஆனால், சுத்தமான மற்றும் தரமான செயல்முறை இல்லையெனில் பிரச்னைகள் ஏற்படலாம். சுத்தமான செயல்முறையைப் பின்பற்றினால் எந்த பக்கவிளைவும் வராது. அதே நேரம், எந்தவொரு சிகிச்சையும் உடனடியாக பலன் தராது. கண்டிப்பாக இரண்டு முதல் மூன்று முறை சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் முடியைப் பராமரிக்கவும், சரியான உணவு முறைகளைப் பின்பற்றவும் வேண்டும்” என்று டாக்டர் மாயா அறிவுறுத்தினார்.