WhatsApp-Image-2025-08-02-at-11.46.06-AM

முயற்சிக்கும் மனம் இருந்தால், ஏழ்மை ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை நிரூபித்துள்ளார் புதுக்கோட்டை மாவட்டம், கொடிவயல் கிராமத்தைச் சேர்ந்த தனுஷா. அரசு பள்ளி மாணவியான இவர் மூன்று வருடங்களாக தொடர்ந்து முயற்சித்து, தற்போது கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவ படிப்பை தொடர உள்ளார்.

எளிய குடும்ப பிண்ணனி:

சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர் தனுஷா. அரசு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தாய், படிக்கும் தம்பி, தனது தாத்தா என சிறிய, தினசரி உணவுக்கே போராடும் நிலை. இருப்பினும் முயற்சிக்கு குடும்ப சூழல் தடையல்ல தனது முயற்சியால் மட்டுமே குடும்ப நிலை மாறும் என கடுமையாக முயற்சித்து வெற்றியடைந்துள்ளார்.

மூன்று வருட சவால் நிறைந்த பயணம்:

12ம் வகுப்பு முடிந்தவுடன் நீட் தேர்வு எழுதிய தனுஷா தனது முதல் முயற்சியில் தோல்வியடைந்தார். “தமிழ் வழியில் பயின்றதால் முதல் முயற்சி சவாலாகவே இருந்தது, எந்த புத்தகம் என்ன படிக்கனும்னே தெரியல, biology மட்டும் படிச்சேன். Physics,chemistry பத்தி ஒன்னுமே தெரியல எத படிக்கனு” என்கிறார்.

பிரமிடு coaching center-ல் நீட் இலவச பயிற்சி அளிப்பது பற்றி தெரிந்து அதில் சேர்ந்து தனது பயிற்சியை தொடங்கி, இராண்டாவது முறை தேர்ச்சி பெற்று தனது குடும்ப சூழல் காரணமாக கல்லூரியில் சேர இயலாமல் போகவே மனம் தளராமல் மீண்டும் முயற்சித்து கோவை அரசு கல்லூரியில் சேர உள்ளார்.

“ முதல் முறை எழுதும்போதே நன்றாக பயிற்சி செய்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என நம்பிக்கை தோன்றியது, ரொம்ப கஷ்டம் வீட்ல எல்லாத்துக்கும்… எப்டியாச்சும் பாஸ் ஆகிறனும்னு படிச்சேன்”

7.5% இட ஒதுக்கீடு மிகவும் உதவியாக இருந்தது:

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு என்பது ஒரு எட்டாக்கனியாகவே இருந்து வந்த நிலையில் இந்த 7.5% இட ஒதுக்கீடு தன்னைப்போன்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக கூறுகிறார். “டாக்டர் ஆகனும்னு சின்ன வயசில இருந்து ஆசை. ஆனா அவ்ளோ காசு வேணுமேனு தோனும். இந்த 7.5% இட ஒதுக்கீடு வந்த அப்புறம் ஒரு நம்பிக்கை வந்துச்சு, 7.5 இல்லைன்னா டாக்டர்னு நினச்சு கூட பாத்துருக்க மாட்டேன்” என்கிறார் தனுஷா.

கனவு காண்பதற்கு எதுவும் தடை இல்லை… முயற்சி மட்டுமே வெற்றியை தீர்மானிக்கும் என்பதை தனது விடாமுயற்சி மூலம் நிரூபித்துள்ளார் தனுஷா.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest