
அமெரிக்கா தற்போது அவர்களது நாட்டிற்குள் வருபவர்கள் மற்றும் இருப்பவர்களை மிகவும் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
அமெரிக்காவில் குடியேறி இருப்பவர்கள், இனி குடியேறப் போகிறவர்கள் என எவரும் அரசிற்கு எதிராக பேசக் கூடாது… நடக்கக் கூடாது என்பதில் அமெரிக்க அரசு தெளிவாக உள்ளது.
இதனால் தான், அமெரிக்கா செல்ல விசாவிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு, அவர்களது சமூக வலைதள பக்கங்களின் தகவல்களை சமர்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதன் மூலம், அவர்கள் அமெரிக்காவிற்கு எதிரான கருத்துகளை கொண்டவர்களா என்பது ஆய்வு செய்யப்படும்.

இன்று அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின் படி,
“அமெரிக்கா விசா பெறும் வரை மட்டும் சம்பந்தப்பட்டவர்கள் கண்காணிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்னும், கண்காணிக்கப்படுவார்கள்.
அவர்கள் அமெரிக்காவின் சட்டம் மற்றும் குடியேற்ற விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறார்களா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
ஒருவேளை, அவர்கள் அதை மீறினால், அவர்களது விசா ரத்து செய்யப்பட்டு, உடனடியாக, சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
ட்ரம்ப் அரசு அமெரிக்காவில் குடியேறியவர்கள் மற்றும் குடியேறுபவர்களின் விஷயத்தில் மிகவும் கவனமாக உள்ளது.