mah

அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்று அரசியல் சாசன வரைவுக் குழுத் தலைவர் பி.ஆர்.அம்பேத்கர் விரும்பியதாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த நீதிபதி பி.ஆர்.கவாய், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவியேற்றதைப் பாராட்டும் வகையில் அந்த மாநில சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று நீதிபதி பி.ஆர்.கவாய் பேசியதாவது:

அமைதிக் காலத்திலும், போர்ச் சூழலிலும் நாட்டை அரசியல் சாசனத்தின் மேன்மை ஒற்றுமையுடன் வைத்திருக்கும். சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித் துறை ஆகிய மூன்று அமைப்புகளுக்கும் அரசியல் சாசனம் உரிமைகளை வழங்கியுள்ளது.

குடிமக்களின் உரிமைகளைக் காக்கும் அரணாக நீதித் துறை செயல்பட வேண்டும் என்று அம்பேத்கர் கருதினார். அரசு நிர்வாகத்தின் தலையீட்டில் இருந்து நீதித்துறை விலகியிருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார் என்று கவாய் பேசினார். முன்னாக, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக கவாய் பதவியேற்றதற்கு மகாராஷ்டிர சட்டப் பேரவையும், சட்ட மேலவையும் வாழ்த்து தெரிவித்தன. சட்டப் பேரவையின் சார்பில் அவரை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டிப் பேசினார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest