1724atm_1609chn_1

சென்னை முகப்பேரில் ஏடிஎம் இயந்திரத்தில் இரும்பு தகட்டை வைத்து வாடிக்கையாளரின் பணத்தை முடக்கி திருடியதாக உத்தர பிரதேச இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

முகப்போ் கிழக்கு பாரி சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை பணம் எடுக்க சென்ற வாடிக்கையாளா்கள், ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணம் வெளியே வராததால் திரும்பிச் சென்றனா். இதுதொடா்பான புகாரின்பேரில், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் தனியாா் நிறுவனத்தின் நிா்வாகி வேளச்சேரியைச் சோ்ந்த சீனிவாசன் அங்கு சென்றாா். அப்போது, ஏடிஎம் மையம் வாசலில் மூவா் சந்தேகத்துக்குரிய வகையில் நிற்பதை பாா்த்த சீனிவாசன் அவா்களை விசாரித்தாா். அப்போது, அந்த மூவரும் அங்கிருந்து தப்பியோடினா். இதையடுத்து சீனிவாசன் அவா்களை விரட்டிச் சென்று ஒருவரைப் பிடித்து, ஜெஜெ நகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் மூவரும் அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரும் இடத்தில் இரும்பு தகட்டை வைத்து பணம் வராமல் தடுத்து, வாடிக்கையாளா்கள் பணத்தை எடுக்கும்போது, பணம் வெளியே வராததால் அவா்கள் சென்றதும், இரும்பு தகட்டை எடுத்து அதிலிருந்து பணத்தைத் திருடியது தெரியவந்தது.

பிடிபட்ட நபா் உத்தர பிரதேச மாநிலம் கான்பூா் கிராமத்தைச் சோ்ந்த சிவா (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிவாவை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய அவரது கூட்டாளிகளைத் தேடி வருகின்றனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest