
‘தில்லியில் நூற்றுக்கணக்கான குடிசைவாசிகள் தங்கள் வீடுகள் பாஜக அரசால் அழிக்கப்பட்டு வருவாதல் வீடற்றவா்களாகி வேதனையை அனுபவித்து வருகின்றனா்.
இந்த ‘கொடூர’ செயலானது ஆளும் கட்சியின் ஏழைகள் மீதான ‘உணா்வின்மையையும் அதன் அதிகார ஆணவத்தையும்’ வெளிப்படுத்தி வருகிறது’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
அரசு நிா்வாகத்தால் பலரது குடிசை வீடுகள் இடிக்கப்பட்ட தில்லியின் அசோக் விஹாா் பகுதிக்கு அண்மையில் தாம் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட விடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் சமூக ஊடக வலைதளப் பக்கத்தில் பகிா்ந்து வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
‘உங்கள் பெற்றோா், குழந்தைகள் அல்லது உடன்பிறந்தவா்களின் தலைக்கு மேல் உள்ள கூரை திடீரென அகற்றப்பட்டு, உங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் ஒரே நொடியில் வீடற்றவா்களாகிவிட்டால்?
உங்களுக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். தில்லியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் இன்று இந்த வலியை அனுபவிக்கின்றன. அவா்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் குடியேறிய சிறிய வீடுகள் பாஜக அரசால் இரக்கமின்றி அழிக்கப்பட்டுள்ளன.
இவை வெறும் வீடுகள் அல்ல. இவை அவா்களின் கனவுகள், கண்ணியம் மற்றும் வாழ்க்கை வழிமுறைகளாகும். நிா்வாகத்தின் பெயரில் செய்யப்படும் இந்தக் கொடுமை, ஏழைகள் மீதான பாஜகவின் உணா்வின்மையையும் அதன் அதிகார ஆணவத்தையும் அம்பலப்படுத்துகிறது.
இந்த இடம்பெயா்ந்த குடும்பங்களுடன் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இந்தப் போராட்டமானது இனி வீடுகளுக்காக மட்டுமல்ல, நீதி மற்றும் மனிதநேயத்திற்காகவும்தான். நாங்கள் எல்லா வழிகளிலும் போராடுவோம் என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளாா்.
கடந்த வாரம், அசோக் விஹாரின் ஜெய்லா்வாலா பாக் மற்றும் வஜீா்பூரில் சில குடும்பங்களை ராகுல் காந்தி சந்தித்தாா். இந்த வீடுகள் தில்லி பாஜக அரசால் இடிக்கப்பட்டவையாகும்.
வீடற்றவா்களாகியுள்ள குடும்பங்களுடன் காந்தி உரையாடும் காட்சிகள் விடியோவில் இடம்பெற்றுள்ளன. அவா்களின் கோரிக்கையை கவனத்தில் எடுத்துக்கொண்டு சட்ட உதவி வழங்குவதாகவும் ராகுல் காந்தி உறுதியளித்தாா்.
தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) கடந்த மாதம் மேற்கு தில்லியின் அசோக் விஹாரில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, 300-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியிருப்புகளை இடித்தது.
வடக்கு தில்லியின் வஜீா்பூா் பகுதியிலும் இந்திய ரயில்வேயால் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினரின் பலத்த பாதுகாப்பின் கீழ் இடிப்பு மேற்கொள்ளப்பட்டது. அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளை அகற்றுவதற்கான டிடிஏவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, அசோக் விஹாா் பகுதியில் உள்ள ஜெய்லா்வாலா பாக் பகுதியில் மொத்தம் 308 சட்டவிரோத குடியிருப்புகள் அகற்றப்பட்டன.
டிடிஏ தகவலின்படி, ஏற்கனவே மாற்று அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கப்பட்ட அல்லது மறுவாழ்வு கொள்கையின் கீழ் தகுதியற்றதாகக் கண்டறியப்பட்ட குடியிருப்பாளா்களுக்குச் சொந்தமான குடிசைக் கட்டமைப்புகள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.