AP25216453686063

காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் ரசிகர்களின் இதயங்களை வென்றார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்

ஓவல் டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 4) ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஓவர்டான் இருவரும் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் ஆட்டமிழக்க, இரு அணிகளுக்கும் இடையேயான இந்த கடைசிப் போட்டியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஒவ்வொரு ஓவருமே மிகவும் சுவாரசியமானதாக இருந்தது. போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாததாகவே இருந்தது. ஜேமி ஸ்மித்துக்குப் பிறகு, ஜேமி ஓவர்டானும் ஆட்டமிழக்க ஜோஷ் டங் களமிறங்கினார். ஜோஷ் டங்கும் ஆட்டமிழந்தால், கிறிஸ் வோக்ஸ் களமிறங்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இங்கிலாந்து அணி இருந்தது.

தோள்பட்டை காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸ் களமிறங்குவாரா? மாட்டாரா? என்பது உறுதியாக தெரியாமல் இருந்தது. ஆனால், அவர் பேடினை அணிந்து நின்றது காயத்தையும் பொருட்படுத்தாமல் அணிக்காக பேட்டிங் செய்ய தயாராக இருப்பதை உறுதிப்படுத்தியது.

பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் ஜோஷ் டங் போல்டாகி வெளியேற, ரசிகர்களின் உற்சாக வரவேற்புக்கு மத்தியில் ஆடுகளம் புகுந்தார் கிறிஸ் வோக்ஸ். இங்கிலாந்து அணி, இந்திய அணி ரசிகர்கள் என அனைவரும் கிறிஸ் வோக்ஸுக்கு சிறப்பான வரவேற்பை அளித்து உற்சாகப்படுத்தினர்.

வலியையும் பொருட்படுத்தாமல் அணிக்காக கிறிஸ் வோக்ஸ் ரன்கள் எடுக்க ஓடியது ரசிகர்கள் அனைவரின் இதயங்களையும் வென்றது. அவர் பந்துகளை எதிர்கொண்டு விளையாடாவிட்டாலும், அணிக்காக காயத்துடன் தைரியமாக களமிறங்கியது பலராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: முன்னாள் வீரர்களின் பாராட்டு மழையில் இந்திய அணி!

England’s Chris Woakes won the hearts of fans by coming to bat for the team despite his injury

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest