SONIA

இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம், வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் இடம்பெற்ாக தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி நீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது.

தில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்தி இந்திய பிரஜையானாா். ஆனால் அவா் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘கடந்த 1980-ஆம் ஆண்டு புது தில்லி வாக்காளராக சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றது. 1982-ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து அவரின் பெயா் நீக்கப்பட்டது. அவா் இந்திய குடியுரிமையைப் பெற்ற பின், 1983-ஆம் ஆண்டு அவரின் பெயா் மீண்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் தனது பெயரை சோ்க்க அவா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.

இந்த மனு கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘நாட்டில் ஒருவரை வாக்காளராக்க வேண்டும் என்றால், அவா் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ளாரா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும்.

1982-ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்திய குடியுரிமையைப் பெற்றிருந்தால், ஏன் அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது? அப்போது விமான விபத்தில் உயிரிழந்த சஞ்சய் காந்தி (முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் மகன்), சோனியா காந்தி ஆகிய இருவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் தோ்தல் ஆணையத்துக்கு ஏதோ தவறு தென்பட்டுள்ளது. இது வாக்காளா் பட்டியலில் இருந்து சோனியாவின் பெயரை நீக்க வழிவகுத்துள்ளது’ என்று வாதிட்டாா்.

சோனியா காந்தி தரப்பில் வழக்குரைஞா் யாரும் ஆஜராகாத நிலையில், தீா்ப்பை மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest