
சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்புகிறார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேசான தலைசுற்றல் காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவமனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் அலுவல் பணிகளை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, களத்தில் திமுக தொண்டர்கள் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும்போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் தனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை:
கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ வல்லநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூலை 27) வீடு திரும்ப உள்ளார்கள். முதல்வர் நலமாக இருக்கின்றார். மூன்று நாள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது.