
கீவ்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார். நேற்று ஒரே இரவில் உக்ரைன் மீது 40 ஏவுகணைகள் மற்றும் 580 ட்ரோன்களை ரஷ்யா ஏவியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் இந்த சரமாரியான தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.