எப்போதுமே இந்தியர்களுக்குத் தங்கத்தின் மீது தனி சென்டிமென்ட் உண்டு. ஆனால், நேற்று முன்தினம் அதன் விலை பவுனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டி, இந்திய நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி இருக்கிறது.
ஆம்… தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை உயர்வு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அருண் நேரு மற்றும் சுதா எழுப்பிய கேள்விகள்… அதற்கு மத்திய நிதி அமைச்சக இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி அளித்த பதில்கள்…

1. கடந்த ஓராண்டில், இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளதா?
“உலகளவிலான தங்கம் மற்றும் வெள்ளி விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு, வரிகள் போன்றவை இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையை நிர்ணயிக்கின்றன.
உலக அளவில் தற்போது பல பிரச்னைகள் நிலவி வருகிறது மற்றும் உலகத்தின் வளர்ச்சியில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், மத்திய வங்கிகளும், பெரிய நிறுவனங்களும் தங்கத்தை பாதுகாப்பான ஒன்றாக கருதி தொடர்ந்து வாங்கி வருகின்றனர். இது தான் தற்போதைய தங்கம் விலை உயர்விற்கு மிக முக்கிய காரணம்.”
2. தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வினால், பண்டிகை மற்றும் திருமண சீசன்களில் இந்திய குடும்பங்கள் சந்திக்கும் நிதி நெருக்கடியை மத்திய அரசு கவனித்திருக்கிறதா?
“கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் அடிப்படையில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துள்ளது.
மக்கள் தங்கம் மற்றும் வெள்ளியை ஒருவித முதலீடாகவும் பார்க்கின்றனர். அதனால், ஏற்கெனவே தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இந்த விலை உயர்வால், அவர்கள் வைத்திருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்திருக்கும்.
புதிதாக தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர்கள் பணத்தை தங்கம் மற்றும் வெள்ளியாக மாற்றுகிறார்கள். நீண்ட காலத்தில், அவர்கள் வாங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயரலாம்.”

3. தங்கம் மற்றும் வெள்ளி விலையை நிலைப்படுத்த இந்திய அரசு ஏதாவது செய்திருக்கிறதா? ரீடெயில் சந்தையில் விற்பனையாகும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை நடைமுறைப்படுத்த இந்திய அரசு ஏதாவது செய்துள்ளதா?
“ஏற்கெனவே கூறியதுபோல, தங்கத்தின் விலை சர்வதேச சந்தையைப் பொறுத்தே அமைகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி நுகர்வோருக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இந்திய அரசு, 2024-ம் ஆண்டு ஜூலை மாதம், தங்கம் இறக்குமதியின் சுங்க வரியை 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைத்துள்ளது.
மேலும், பிசிக்கல் தங்கத்தின் தேவையைக் குறைக்க தங்கம் பணமாக்குதல் திட்டம், தங்க இ.டி.எஃப்கள், தங்கப் பத்திரங்கள் போன்றவற்றை இந்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம், தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதியையும், அதன் மீது உள்ள அழுத்தத்தையும் குறைக்கலாம். இதன் மூலம், இந்தியாவில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளியையே பயன்படுத்தலாம்.
சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் தங்க இறக்குமதி, தங்க வர்த்தகத்தை தடுக்க… கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ”

4.இந்திய ரிசர்வ் வங்கியின் தங்கம் கையிருப்பு இந்திய ரூபாயின் மதிப்பை வலுப்படுத்துமா?
”இந்திய ரிசர்வ் வங்கி, 1934 சட்டப்படி, இந்திய ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் அனைத்து சொத்துகளும் இந்திய ரூபாய்க்கு மிகவும் உதவும். இங்கு சொத்துகள் என்று கூறப்படுவது தங்கம் மற்றும் வெளிநாட்டு பத்திரங்கள் ஆகும்.
2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான தரவுகளின் படி, இந்திய ரிசர்வ் வங்கி 879.58 மெட்ரிக் டன் தங்கத்தைக் கையிருப்பாக வைத்துள்ளது.
இந்தக் கையிருப்பு உலகளவில் இந்திய ரூபாய் மற்றும் ஒட்டுமொத்த இந்திய பொருளாதார வெளிப்புற நிலைத்தன்மை மீது நம்பிக்கை அளிக்கும். ”