
இந்திய சுழல்பந்து வீச்சாளர் சஹால் விவாகரத்து குறித்து பேசும்போது தான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார்.
சஹாலுக்கும் தனஸ்ரீ வர்மாவுக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர், கருத்து வேறுபாட்டால் இவர்கள் 2024-இல் பிரிந்தார்கள்.
சமீபத்தில் ஆர்ஹே மஹ்வேஷுடன் காதலில் இருக்கிறார். இதனால், அவர்மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் ராஜ் ஷமானி யூடியூப் சேனல் ஒன்றில் அளித்த பேட்டியில் சஹால் பேசியதாவது:
எங்களுக்கு பிரச்னைகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. அது ஒரு முடிவுக்கு வரும்வரை நாங்கள் அதை வெளியே காட்டிக்கொள்ள விரும்பவில்லை.
இருவருக்கும் நேரம் கிடைக்கவில்லை
நான் இந்திய அணிக்கும் அவர் அவரது வேலையிலும் பிஸியாக இருந்தோம். அதனால், இருவருக்கும் போதிய நேரம் கிடைக்கவில்லை. உறவில் எவ்வளவு நாள் நடிக்க முடியும்? அந்த ஒருநாள் வந்ததும் பிரிந்து விட்டோம்.
விவாகரத்தின்போது விஜய் ஹசாரே கிரிக்கெட்டில் இருந்து ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டேன். ஏனெனில் என்னால் எனது மூளையைப் பயன்படுத்த முடியவில்லை.
கிரிக்கெட்தான் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அதுதான் தொடர்ந்து என்னை மகிழ்ச்சியாக்குகிறது. அதை செய்ய முடியவில்லை எனில் ஏதோ தவறு நடக்கிறது என ஓய்வு எடுத்தேன்.
தற்கொலை எண்ணம் பீடித்தது
என் வாழ்க்கையில் நான் எப்போதும் யாரையும் ஏமாற்றியதில்லை. துரோகமும் செய்ததில்லை. நான் அப்படியான மனிதர் இல்லை. என்னைப் போல விசுவாசமான ஆளைப் பார்க்கமுடியாது. நான் இதை உலகத்துக்கு நிரூபிக்க வேண்டியதில்லை.
நான் அழுவதை ஏன் சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும்? சில மாதங்களுக்கு முன்பு நான் மன அழுத்தத்தில் இருந்தேன்.
தற்கொலை எண்ணமும் இருந்தது. ஏன்னெனில் எனது மூளை வேலை செய்யவில்லை. மிகவும் பதட்டத்தில் இருந்தேன். இவையெல்லாம் என் நெருங்கிய வட்டத்துக்குத் தெரியும்.
இந்தக் கடுமையான நாளில் இருந்து என்னை எனது குடும்பத்தாரும் மஹ்வேஷும் மீட்டார்கள்.
எனது டீ ஷர்ட்டில் சுகர் டாடி வசனம் இருந்ததுக்குப் பிரச்னை ஆனது. அந்த நேரத்தில் இதைச் சொல்ல தோன்றியது. எதிர்புறத்தில் ஒன்று நடக்க, நான் எனக்குப் பிடித்ததைச் செய்ய முடிவெடுத்தேன் என்றார்.