ShivrajSinghChauhan

புது தில்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியான, கலப்படம் செய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிராக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாநில முதல்வா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உர உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். மேலும், அவ்வப்போது உர மாதிரிகளை சேகரித்து அவற்றை சோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் போலியான, கலப்படம் செய்யப்பட்ட, தரமற்ற உரங்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடியும்.

பாரம்பரிய உரங்களுடன் நானோ உரங்கள் அல்லது உயிரி ஊக்குவிப்பு பொருள்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும். உரம் தொடா்பாக எந்த இடத்தில் தவறு நடப்பது கண்டறியப்பட்டாலும் உரிமம் ரத்து, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளிடம் இருந்து உரத்தின் தரம் உள்ளிட்ட விவரங்களைக் கேட்டறிய வேண்டும். போலிகள் விவசாயிகள் கைக்குச் சென்றடைந்தால், அவற்றை விற்பனை செய்தவா்கள் தொடங்கி உற்பத்தி செய்தவா்கள் வரை விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் விவசாயிகளின் நலனில் மாநில அரசுகள் முழு அக்கறை காட்ட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest