
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவில் கரூரை போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகளின் சாலைவலம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலத்திற்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும் என கோரிய பொது நல மனு மீது இன்று(அக்.3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவெக தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் கரூர் பிரசாரத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்தக் கோர சம்பவம் நடந்துள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்கள் இனி மேலும் நடக்காதபடி அனைத்து அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும்.
நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில் குமார், தவெக தலைவர் விஜய் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய என்ன தடை உள்ளது.
இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. புகார் இல்லாவிட்டாலும் அவர் மீது வழக்கு செய்திருக்க வேண்டுமே தமிழக காவல் துறைக்கு நீதிபதி செந்தில் குமார் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை. தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள். விஜய் பிரசாரம் செய்த வாகனம் ஏன் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி செந்தில் குமார் கேள்விகளை முன்வைத்துள்ளார்.